Sunday, May 9, 2010

அறிமுகம்

இந்த வலையில் நான் எழுதப்போகும் எல்லாமே என் வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக கற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. தகவல்கள் படிப்பப்பதற்கு சுவையாக இருந்தாலும் அதையே அனுபவ பூர்வமாக தெரிந்து கொள்ளும்பொழுது நமக்கு அதிக பலன் கிடைக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆங்கிலத்தில் "Knowledge may become useless until it becomes your Experience" என்று கூறுவார்கள்.
இரண்டாவதாக நமக்கு ஏற்படும் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது அது மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக ஆகிறது. ஆனால், "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று ஒரு பழைய ஞானி பாடியதுபோல் பல நேரங்களில் நாம் சொல்வதை கேட்டுக்கொள்வதற்கு எவரும் இல்லை எனும்பொழுது கொஞ்சம் மனச்சோர்வாகதான் இருக்கும். அதைப் பற்றி கவலைப் பட்டால் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடும். அதனால் சொல்ல வந்ததை சொல்லிவிடுவோம். எடுத்துக்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்ற துணிச்சலுடன் இதை ஆரம்பம் செய்து வைக்கிறேன். எவ்வளவு சுவையாக, எளிமையாக எழுத முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கிறேன்.
அதற்காக இதை ஒரு வகுப்பறையாக மாற்றும் எண்ணம் எனக்கில்லை. அதனால் பொழுதுபோக்கு அம்சங்களும் அவ்வப்பொழுது இங்கே காணலாம். இந்த முன்னுரையோடு இந்த வலையில் எழுதத் தொடங்குகிறேன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரிவிக்கவும். உங்கள் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து வருவேன்.

No comments:

Post a Comment